(THINA SEITHI - COLOMBO) - எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான செய்திகள் உண்மையில்லை எனவும் அந்த விடயம் தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அம்பிகா சற்குணநாதன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஆணையாளராக இலங்கை மக்களுக்கு சேவை செய்வதற்கும் மனித உரிமைகளை பாதுகாப்பததிலும் அதனை ஊக்குவிப்பதிலும் ஒரு பங்கை கொண்டிருக்குப்பதற்கான வாய்ப்பை பெற்றது ஒரு பாக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இராஜினாமா குறித்து ஊடகங்களில் ஆதாரமற்ற ஊகங்கள் மற்றும் வேண்டும் என்றே திணிக்கப்பட்ட தவறான தகவல்கள் காணப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராஜினாமா செய்வது குறித்து கடந்த 6 மாதங்களாக தீர்மானித்து வந்ததாகவும் அதன்பிரகாரமே தான் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலில் போட்டியிடுமாறு ஒரு அரசியல் கட்சியில் இருந்து அழைப்பு கிடைத்தது என சுட்டிக்காட்டிய அவர் இருப்பினும் தனது அடுத்தகட்ட நகர்வு குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் தனது பங்களிப்பு இந்த நாட்டுக்கு தொடர்ந்தும் இருக்கும் என அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக அவர் போட்டியிடுவதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment